சிதம்பரத்தில் மலர்க் கண்காட்சி
சிதம்பரம் மாரியப்பா நகர் ராதா நர்சரி கார்டனில் 29-ஆவது ஆண்டு மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் மாரியப்பா நகர் ராதா நர்சரி கார்டனில் 29-ஆவது ஆண்டு மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கண்காட்சி தொடக்க விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.எம்.நாச்சியப்பன் வரவேற்றார். பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன் மலர்க் கண்காட்சியை தொடக்கி வைத்தார். பல்கலைக்கழக தோட்டக்கலை துறைத் தலைவர் கே.சேகர் முதல் விற்பனையை தொடக்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில் பல வகை ரோஜா செடிகள், பன்னீர் செடிகள், கனகாம்பர செடிகள், மதிப்புக்கூடிய மிளகு, ஒட்டுரகப் பழ மரக் கன்றுகள், வேகமாக வளரும் மகோகனி, விஷ உயிரினங்களை விரட்ட நாகவல்லி, புற்றுநோயைக் கட்டுப்படுத்த முள்சீதா செடி, மரக் கன்றுகள், அலுவலகத்தை அழகூட்டும் செடிகள், கோயிலில் வைப்பதற்கேற்ற செடிகள், மருந்துச் செடிகள், உரம் கலந்த மண், இயற்கை உரங்கள் அனைத்தும் விற்பனைக்கு கிடைக்கும் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் வேளாண் பேராசிரியருமான ஆர்.எம்.நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும் கண்காட்சியில் விற்கப்படும் செடிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு என்றார்.
இந்தக் கண்காட்சி மார்ச் 11-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.