தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் ஆய்வு நடத்த இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் ஆய்வு நடத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் ஆய்வு நடத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகர 10 -ஆவது மாநாடு அந்தக் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலர் ஜி.மணிவண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் பி.பாலு, துணைச் செயலர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கடலூர் நகரில் செயல்படும் பல தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ நிர்வாகமே மருந்துக் கடைகளை நடத்துகின்றன. அதில், மருந்தாளுநர் படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்படாததுடன், வாங்கும் மருந்துகளுக்கும் உரிய ரசீது அளிப்பதில்லை.
மேலும், மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இலவசமாக வழங்கும் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நோயாளிகள் கேட்கும் மருந்துகளை வழங்காமல் வேறு ஏதாவது மருந்துகளை வழங்குகின்றனர்.
மாவட்டம் முழுவதும் இவ்வாறே நிகழ்வதால், மாவட்ட மருந்து ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடலூரில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு உள்படாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் குடியிருப்பு, பட்டா வழங்க வேண்டும்.
நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சி.கே.ராஜன், வட்டக் குழு உறுப்பினர் கே.பி.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.