வள்ளலார் தெய்வ நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென தமிழக சட்டப் பேரவையில் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென தமிழக சட்டப் பேரவையில் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
தனது தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டப் பேரவையில் அவர் மேலும் பேசியதாவது: வடலூர் பேரூராட்சியிலுள்ள வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சுமார் 50 லட்சம் மக்கள் வந்துசெல்கின்றனர். மாத பூஜைகளின்போது ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். குறிப்பாக அங்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அங்கேயே தங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
மேலும், வடலூரில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளதாலும், ஏற்கெனவே தினமும் திரளானோர் வந்துச் செல்வதாலும் இதை சுற்றுலா நகரமாக அறிவித்து, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இதற்காக சுற்றுலாத் துறை மூலமாக இயங்கும் தமிழ்நாடு ஹோட்டல், தங்கும் விடுதியை இங்கு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் கூறியதாவது: இந்தக் கோயிலில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் சுற்றுலா அலுவலர்களை அனுப்பி ஆய்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, சுற்றுலாத் தலமாக அறிவிப்பதற்கும், தமிழ்நாடு ஹோட்டல் அமைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசின் நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.