பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது.
பண்ருட்டி வட்டம், ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (50). இவரது மகள் கோமதி (20). இவருக்கு விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதற்காக ஜெயபால் தனது குடும்பத்தினருடன் அதிகாலை 4 மணிக்கு கூரை வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். அவர் சென்ற அரை மணி நேரத்தில் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த பண்ருட்டி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இருப்பினும், கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வீட்டில் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த பொருள்கள், பணம் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.