கஜா புயலைத் தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடற்கரையோர ஊராட்சிகளில் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை அருகே கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தின் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. குறிப்பாக, கடலோர கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் புயல், மழையால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடற்கரையோர ஊராட்சிகளான சிறுபாளையூர், தியாகவல்லி, காயல்பட்டு, ஆதிநாராயணபுரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், திருச்சபுரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் புயல் நிவாரண மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த கிராம மக்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.