சம்பா நெல் பயிர்களில் இலை சுருட்டுப் புழு தாக்குதலைத் தடுக்க வேளாண் துறை ஆலோசனை வழங்கியது.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் ஆர்.விஜயராகவன் தெரிவித்ததாவது: சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் சம்பா நெல் பயிர்களில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நோயின் அறிகுறியாக நெல் பயிர்களின் இலைகள் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். இலைகளின் பச்சை நிற திசுக்களை புழுக்கள் சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மை நிறத்தில் காய்ந்ததுபோல் காட்சியளிக்கும். இலைகளில் நீளவாட்டில் சுருட்டுப் புழுக்கள் அதனுள்ளேயே இருந்துவிடும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த உரிய அளவில் வேப்பங்கொட்டை சாறு அல்லது வேப்பெண்ணெய் தெளிக்கலாம். மேலும் ஏக்கருக்கு பெனிட்ரோட்டியான் 50EC 400 மில்லி அல்லது மானோகுரோட்டோபாஸ் 36SL 400 மில்லி அல்லது பாசலோன் 35EC 600 மில்லி அல்லது டைகுளோர்வாஸ் 76 % 100 மில்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.