கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டுமென பா.ம.க.வினர், கிராம மக்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொத்தவாச்சேரி கிராமத்தில் முருகன் கோயில் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை அகற்ற வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமையில் அந்தக் கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
கொத்தவாச்சேரி கிராமத்தில் கோயில் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மது அருந்துவோர் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி, கிண்டல் செய்கின்றனர். கோவில் முன் அமர்ந்தும் மது அருந்துகின்றனர். பின்னர் மதுப் புட்டிகளை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர். மேலும், வயல்வெளியில் அமர்ந்து மது அருந்துவதோடு, அங்கேயே பிளாஸ்டிக் குப்பைகளையும் வீசிச் செல்கின்றனர். எனவே, டாஸ்மாக் மதுக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
பாமக மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன், இளைஞரணி மாநில நிர்வாகி இள.விஜயவர்மன், மாவட்டத் தலைவர் வாட்டர் மணி, ஒன்றியச் செயலர் பூ.ஜெயராகவன், அமைப்புச் செயலர் வெ.செந்தில்முருகன், ஊர் பிரமுகர்கள் திருமால், வ.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.