மீண்டும் சேதமடைந்த கெடிலம் சாலை!
கடலூரில் கடந்த சில நாள்களாக பெய்த மழைக்கு கெடிலம் ஆற்றங்கரை சாலை மீண்டும் சேதமடைந்துவிட்டது.
கடலூரில் கடந்த சில நாள்களாக பெய்த மழைக்கு கெடிலம் ஆற்றங்கரை சாலை மீண்டும் சேதமடைந்துவிட்டது.
கடலூர் பேருந்து நிலையம் அருகே கெடிலம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையில் சாலை அமைத்து பேருந்து நிலையம் - கம்மியம்பேட்டை இடையே போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ரூ.4.46 கோடியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையானது நெடுஞ்சாலைத் துறையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உள்ளூர் திட்டக் குழுமத்தால் அமைக்கப்பட்டதாகும்.
ஆனால், இந்தச் சாலையை எந்தத் துறை பராமரிப்பது என்ற கேள்வி எழுந்தபோது நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, நகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக் குழுமம் ஆகிய எந்தத் துறையும் பொறுப்பேற்கவில்லை. இந்தச் சாலையானது கடந்த 2015-ஆம் ஆண்டில் பெய்த பெருமழையால் பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறியது. கடலூர் புறவழிச் சாலையாக செயல்பட்டதால் இந்தச் சாலை சேதத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே, இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு, போராடியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.2.26 கோடியில் இந்தச் சாலை 2017-ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. இருப்பினும், சில மாதங்களிலேயே மீண்டும் சேதமடைந்ததைத் தொடர்ந்து தனியார் நிதி பெற்று உள்ளூர் திட்டக்குழுமம் மூலமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.30.80 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.
ஆனால், இந்தச் சாலையும் கடலூரில் கடந்த சில நாள்களாக பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்தது. சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஆங்காங்கே பள்ளமாக மாறி விட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர் கூறியதாவது:
சாலை அமைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. எனவே, இந்தச் சாலை அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததா என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நிதி ஒதுக்கீடு பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சாலையை பராமரிக்க முடியும் என்றார் அவர்.