கடலூர் தேவனாம்பட்டினம், அரசு பெரியார் கலைக் கல்லூரியில் புள்ளியியல் துறை சார்பில் புள்ளியியல் மன்றம் தொடக்க விழா, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் ப.ரா.ராஜகுமார் தலைமை வகித்து, புள்ளியியலின் அன்றாட பயன்பாட்டு பற்றியும், புள்ளியில் படிப்பு அன்றாட வாழ்விலும், எதிர்காலத் திட்டமிடலிலும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விளக்கிப் பேசினார். தமிழ்த் துறைத் தலைவர் ப.குமரன் தொடக்க உரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் சுப்பிரமணி பங்கேற்று, புள்ளியியலின் முக்கியத்துவம், இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விரிவுரையாளர்கள் விஜய் அமிர்தராஜ், கலைவாணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
துறைத் தலைவர் சுசி.கணேஷ்குமார் வரவேற்க, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் ராஜநிலவன் நன்றி கூறினார். மாணவி ரூபி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.