காவலர் வீரவணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை
காவலர் வீரவணக்க நாளையொட்டி, கடலூரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
காவலர் வீரவணக்க நாளையொட்டி, கடலூரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த 1959-ஆம் ஆண்டு அக்.21-ஆம் தேதி லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தையொட்டி, இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் அக்.21-ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூரில் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் ராஜேந்திரன் சிலை முன் வீரவணக்க நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் 1.9.2017 முதல் 31.9.2018 வரை மொத்தம் 414 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இவர்களது தியாகத்தை போற்றும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வீரராகவன், வேதரத்தினம், உதவி காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், ஊர்க் காவல் படை விழுப்புரம் சரக துணை தளபதி கேகர்நாத் டாக்டர் சுரேந்தர், தீயணைப்புப் படை அலுவலர் வீரபாகு உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வின்போது ஆயுதப் படை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் ஆயுதப் படை காவலர்கள் 21 துப்பாக்கி குண்டுகளை வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினர்.