திருந்திய நெல் சாகுபடி: வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
கடலூர் வட்டாரம், கரைமேடு கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களை, கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
கடலூர் வட்டாரம், கரைமேடு கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களை, கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, குறுவை, சம்பா மற்றும் நவரை பருவங்களில் மொத்தம் 1.30 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், அதிகபட்ச மகசூலைப் பெறவும், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கவும் வேளாண்மைத் துறை மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மொத்த இலக்கில் 70 சதவீதத்துக்கும் மேல் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க ஒவ்வொரு வட்டாரம் வாரியாக தனி இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தளவு விதை, மேட்டுப்பாத்தி, பாய் நாற்றங்கால், 14 நாள் வயதுடைய நாற்றை நடவு செய்வது, களைகளைக் கட்டுப்படுத்த கோனோவீடர் கருவி பயன்பாடு, இயந்திர நடவு ஆகிய தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து நல்ல மகசூல் பெற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 84 கிராமங்களில் முழுமையாக திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க சம்பா பருவத்தில் 9,370 ஹெக்டேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடலூர் வட்டாரத்தில் 6 கிராமங்களில் 820 ஹெக்டேர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் வட்டாரம், கரைமேடு கிராமத்தில் 89 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி மூலம் நெல்பயிர் நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வயலை கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகவன், உதவி வேளாண்மை அலுவலர் ரஜினிகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.