நெல் வயல்கள் சேதம்
விருத்தாசலம் அருகே நடவு செய்யப்பட்ட நெல் வயலில் இறங்கி, மின் கம்பத்தின் மீது கம்பிகள் அமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டது
விருத்தாசலம் அருகே நடவு செய்யப்பட்ட நெல் வயலில் இறங்கி, மின் கம்பத்தின் மீது கம்பிகள் அமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டது தொடர்பாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கம்மாபுரம் ஒன்றியம், ஊதங்கால் கிராம பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கா நெல் நடவு செய்துள்ளனர். ஊதங்கால் கிராமத்தில் தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் மின் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் விளை நிலங்களின் வழியாக ஏற்கெனவே மின் கம்பங்கள் அமைக்கப்பட்ட நிலையில், அதன்மீது மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் ஊதங்கால் கிராம விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நெல் விதையிட்டுள்ளனர். பலர் நடவு பணிகளை முடித்துள்ளனர். இந்த நிலையில், மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பிகள் அமைப்பதற்காக நெல் விதையிட்ட வயலிலும், நடவு செய்துள்ள பயிர்கள் மீதும் கம்பிகளை எடுத்துக்கொண்டும், நடந்தும் சென்றதால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து அந்தப் பகுதி விவசாயிகள் மின் வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, உரிய அனுமதி பெற்ற பிறகே பணியில் ஈடுபட்டதாகக் கூறினராம். பல்வேறு சிரமங்களுக்கு இடையே நெல் பயிர்களை நடவு செய்துள்ள நிலையில், மின் வாரிய ஊழியர்களின் இந்த நடவடிக்கை தங்களுக்கு வேதனை அளிப்பதாக விவசாயிகள்
தெரிவித்தனர்.