கடலூரில் ரூ.1.20 கோடியில் நடைமேம்பாலம் ஆய்வுப் பணி தொடக்கம்
கடலூர் நகரில் ரூ.1.20 கோடியில் மின்தூக்கியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
கடலூர் நகரில் ரூ.1.20 கோடியில் மின்தூக்கியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் (எண் - 45ஏ) அமைந்துள்ளது கடலூர் நகராட்சி. சுமார் 2 லட்சம் பேர் வசித்து வரும் இந்த நகராட்சியின் முக்கியமான பகுதி பாரதி சாலையாகும். தேசிய நெடுஞ்சாலையே இந்தப் பகுதியில் பாரதிசாலையாக அழைக்கப்படும் நிலையில் சாலையின் இரு பகுதியிலும் ஏராளமான கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. இதனால், பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும். எனவே, பள்ளி அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பல்வேறு பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், நடைமேம்பாலக் கட்டுமானப் பணிக்காக கடலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடலூர் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பாரதிசாலையில் புதுநகர் காவல் நிலையம் எதிரே நடை மேம்பாலம் அமைக்க மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.20 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலத்தை நவீனகரமாக அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக, புதுச்சேரியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியின் உதவியை நாடியுள்ளோம். அவர்கள், குறிப்பிட்ட பகுதியில் மண், ஸ்திரத்தன்மை, அமைவிடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயாரிப்பார்கள்.
நடைமேடை மட்டுமே அமைக்க முதலில் திட்டமிட்ட நிலையில் தற்போது வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளும் எளிதில் நடைமேடையை பயன்படுத்தும் வகையில் மின்தூக்கி அமைத்திடும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுப் பணிகள் முடிவுற்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புந்தப் புள்ளிகள் கோரப்படும். அதன் பின்னர் விரைவில் இந்தப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தனர்.