முகப்பு
கடலூர்

குடிநீர் திட்டத்துக்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிய மழை நீர்: பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

எல்லப்பன்பேட்டையில் அரசுப் பள்ளி அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணிக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:49 AM
பகிர்:

எல்லப்பன்பேட்டையில் அரசுப் பள்ளி அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணிக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
 குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, 5-ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதி எல்லப்பன்பேட்டை. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 127 மாணவர்களும், அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகளும் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி அருகே இருந்த சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதாம்.
 இதற்காக பழைய தொட்டி இருந்த இடத்திலேயே சுமார் 10 அடி ஆழம், 15 அடி அகலத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இதே பகுதியில் மீண்டும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம். அதனால், பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் பணிகள் தடைபட்டுள்ளன.
 பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள இந்தப் பள்ளத்தை மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக மூட வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்கும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகத்துக்கும் கடிதம் வழங்கியுள்ளனராம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 இந்த நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழையால் அந்தப் பள்ளத்தில் தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் வந்து செல்லும் இடத்தின் அருகே பெரிய பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் மாணவர்கள் தவறி விழ வாய்ப்புள்ளது என்பதால், உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.