அன்லாக் முறையில் கேபிள் டி.வி. சேனல்களை வழங்கியதாக தனியார் கேபிள் டி.வி. அறைக்கு புதன்கிழமை "சீல்' வைக்கப்பட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தற்போது செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவையை வழங்கி வருகிறது. இதற்காக, ஏற்கெனவே இருந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களை தமிழக அரசு இணைத்துக் கொண்டு அவர்கள் மூலமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், திட்டக்குடியை அடுத்த தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜோதி என்பவர் தொடர்ந்து அனலாக் முறையில் டி.வி. சேனல்களை ஒளிபரப்பி வருவதாக புகார் தெரிவிக்கப்ட்டது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில், அனலாக் முறையில் சேனல்களை ஒளிபரப்புவது சட்டத்துக்குப் புறம்பானதாகும். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
இதுகுறித்த தகவலின் பேரில், விருத்தாசலம் சார்- ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், அரசு கேபிள் தனி வட்டாட்சியர் முகமது அசேன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தனர். இதில், அனலாக் முறையில் சேனல்கள் ஒளிபரப்புவது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ரிசீவர்கள் உள்ளிட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கேபிள் டி.வி. அறைக்கும் "சீல்' வைக்கப்பட்டது.