சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்யக் கோரி, குமாரகுடியில் மாதர் சங்கத்தினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேத்தியாதோப்பு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13-வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த 3 பேர் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்தனராம். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் ஒருவரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் உடனடியாக கைதுசெய்யக் கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கும்பகோணம்- சேத்தியாதோப்பு தேசிய நெடுஞ்சாலையில் குமாரகுடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் தேன்மொழி தலைமை வகித்தார். மறியலால் அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமுட்டம் வட்டாட்சியர் புகழேந்தி மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.