பண்ருட்டி பகுதியில் தொடர் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி பகுதியில் அண்மைக் காலமாக பைக் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திருவதிகை ரயில்வே கேட் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், போலீஸாரைக் கண்டதும் திரும்பிச் சென்றார். சந்தேகமடைந்த போலீஸார் அந்த இளைஞரை பின்தொடர்ந்து சென்று அவரை பிடித்தனர்.
விசாரணையில், அவர் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அப்பு என்ற அய்யனார் (24) என்பதும், இவர் பண்ருட்டி பகுதியில் பைக்குகளை திருடி புதுச்சேரியில் விற்பனை செய்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து அய்யனாரிடம் இருந்து 10 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்து, அவரை கைதுசெய்தனர்.