தம்பதியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத்
தண்டனை விதித்து, பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (26). தொழிலாளி. இவரது மனைவி ரமணி (21). இவர்கள் 2.1.2014 அன்று அதே பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பவரிடம் ரூ.2 ஆயிரம் கடன் பெற்றனராம். கடன் தொகையை வளர்மதியும், அவரது கணவர் குணசேகரும் திருப்பிக் கேட்டனராம். அப்போது, ஜெயசீலனும், ரமணியும் சேர்ந்து தாக்கியதில் குணசேகர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளித்த குற்றவியல் நடுவர் கணேஷ், ஜெயசீலனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும், ரமணிக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.