வடலூரில் நடைபெறவுள்ள தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக திருச்சியில் இருந்து கடலூர் வரை கூடுதல் ரயில்கள் இயக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரில் வரும் 21-ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.இந்த நிலையில், வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் மற்றும் சன்மார்க்க சங்கங்கள் சார்பில் ஆன்மிக மக்கள் தொடர்பு சேவை நிர்வாகி ப.ஜெயச்சந்திரன் தென்னக ரயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், வருகிற 20 -ஆம் தேதி கொடியேற்றமும், 21-ஆம் தேதி காலை 6, 10 மணிகளுக்கும், பிற்பகல் ஒரு மணிக்கும், இரவு 7, 10 மணிகளுக்கும் , 22-ஆம் தேதி காலை 5.30 மணிக்கும் என ஆறு காலங்களுக்கு ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது.
23-ஆம் தேதி வடலூர் மேட்டுக்குப்பம் சித்த வளாக திருமாளிகை திருவறை தரிசனமும் நடைபெற உள்ளது. எனவே, 20 முதல் 23-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு நடைபெறும் இந்த விழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அவர்கள் எளிதில் வடலூர் வந்தடையும் வகையில், இந்த நான்கு நாள்களுக்கும் திருச்சியிலிருந்து கடலூர் முதுநகர் வரை கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.