பரூர் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே சின்னப்பரூர் கிராமத்தில் பரூர் சாலையில் தனியார் இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. இந்த கடை அமைவதற்கு இடம் தேர்வானது முதலே அந்தப் பகுதியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். எனினும், மதுக் கடை திறக்கப்படுவதும், பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் கடை மூடப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பரூர் கிராமத்துக்குச் செல்லும் சாலைப் பகுதியில், விவசாய நிலத்துக்கு மத்தியில் இந்தக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மூடப்பட்டிருந்த மதுக் கடையை திறப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஊழியர்கள் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கிராமமக்கள் கடைக்கு முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கடையை வாடகைக்கு விட்டவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கு வந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து, மதுக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தனர்.