படைப்புழு தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் வட்டாரங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல், வன விலங்குகளால் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இதற்கு தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். திட்டக்குடி வட்டத்தில் மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயலர் கோ.மாதவன், மாநில கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.