தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் விவசாயிகளை அலைக்கழித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தைச் சேர்ந்த ச.பரந்தாமன், மதுரையைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்தார். இந்த நிலையில், புணேயில் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் அண்மையில் அவர் உயிரிழந்தார்.
பெண்ணாடத்தில் உள்ள பரந்தாமனின் வீட்டுக்கு கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் சென்று, அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: பரந்தாமனின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது சம்பா அறுவடை பருவம் தொடங்கியுள்ளது.
ஆனால், அரசோ அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமல், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் நடவடிக்கை பின்பற்றப்படவில்லை. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.
ஏற்கெனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்றால், நெல் ஈரப்பதமாக உள்ளதாகக் காரணம் கூறி விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில்லை என்ற மத்திய அரசின் முடிவைப் பின்பற்றி தமிழக அரசும் செயல்படுகிறது.
பெண்ணாடம் பகுதியில் கரும்பு கொள்முதல் செய்த தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, நெல் கொள்முதல் நிலையம் திறப்பு, கரும்பு நிலுவைத் தொகை, மக்காச்சோள பயிர்கள் பாதிப்பு போன்ற பிரச்னைகளில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
அப்போது, கடலூர் மாவட்ட செயலர் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.