சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் என்கிற யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்தல வரலாற்று உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சுவாமி வீதியுலா மற்றும் திருவோடு கொடுத்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை பகல் சுவாமி வீதியுலா வந்த பிறகு, கோயில் தீர்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
சுரேஷ் குருக்கள் வரலாற்று நிகழ்வுகளை நடத்தினார். திருநீலகண்ட நாயனார் குரு பூஜையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு யௌவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்ப செட்டியார் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.