சிதம்பரம் மீதிகுடி கிராம சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம், கொத்தங்குடி பஞ்சாயத்துக்கு உள்பட்டது மீதிகுடி கிராமம். இந்தக் கிராமத்துக்கான சாலை சேதமடைந்துள்ளது.
அதாவது, கொத்தங்குடி ரயில்வே கேட்டில் இருந்து மீதிகுடி வரையிலான 3 கி.மீ. சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து "தினமணி'யில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் சாலைப் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதையொட்டி பழைய சாலை கொத்தப்பட்டு, ஜல்லி கலவை மட்டும் போட்டுச் சென்றுவிட்டனர். தார் சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மீதிகுடியைச் சுற்றியுள்ள கிராமங்களான கோவிலாம்பூண்டி, மீதிகுடி மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சாலை வழியாகத்தான் அண்ணாமலை நகர், சிதம்பரம் நகரை வந்தடைய முடியும்.
மேலும், கிள்ளை, அனுப்பம்பட்டு, ஏ.மண்டபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அவசரத் தேவைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் பிரதான சாலையாகவும் இந்தச் சாலை உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டது குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.