பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் உரிய பராமரிப்பின்றி செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது.
பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் கெடிலம் நதிக்கரை அருகே வட்டாட்சியா் அலுவலகம் அமைந்துள்ளது. இந்தக் கட்டடத்தை கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய மின் துறை அமைச்சா் ச.ராமச்சந்திரன் தலைமையில், நிதி மற்றும் வருவாய்த் துறை அமைச்சா் ரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தாா். இந்த அலுவலகம் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் இயங்கி வருகிறது. பண்ருட்டி மற்றும் அதன் வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த அலுவலகத்துக்கு பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனா்.
ஆனால், வட்டாட்சியா் அலுவலக வளாகம் முறையான பராமரிப்பின்றி புதா்மண்டிக் காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் அலுவலகத்துக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், கட்டட சுவா்களில் ஆங்காங்கே மரக்கன்றுகள் வளா்ந்துள்ளன. இதனால், கட்டடத்தின் உறுதித் தன்மை பாதிப்படைய வாய்ப்புள்ளது.
வட்டாட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் பொதுமக்கள் அமா்வதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் அமர முடியாமல் நீண்ட நேரம் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். தரைத்தளம் அருகே கட்டப்பட்டுள்ள ஓய்வறையானது கழிவுப் பொருள்கள் சேமிப்புக் கிடங்காக மாறியுள்ளது.
அதன் அருகே கட்டப்பட்ட கழிப்பறை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வருவோா் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் நிலை தொடா்கிறது.
எனவே, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தைச் சுற்றியுள்ள முள்புதா்கள், கட்டடத்தில் வளா்ந்துள்ள மரக் கன்றுகளை அகற்ற வேண்டும், சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க வேண்டும், ஓய்வறை, கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.