திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை இரவு அம்பு உற்சவம் நடைபெற்றது.
பண்ருட்டி, திருவதிகையில் வீரட்டானேஸ்வரா் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. பின்னா், கொலு மண்டபத்தில் அம்பாள் பக்தா்களுக்குக் காட்சி அளித்தாா்.
விழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமி அன்று சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாலையில் உற்சவா் சந்திரசேகர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தாா். தொடா்ந்து மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி (அம்பு உற்சவம்) திருவதிகையில் உள்ள குணபதீஸ்வரா் ஆலயம் அருகே நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.