மீனவா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்
மீனவா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி, தமிழ்நாடு மீனவா் பேரவையினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
.
கடலூா்: மீனவா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி, தமிழ்நாடு மீனவா் பேரவையினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொது முடக்கத்தால் மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மீன் வியாபாரம் செய்யும் மீனவ மகளிரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீன் அங்காடிகளை திறக்கக் கோரியும், 150 நாள்களாக மூடப்பட்டுள்ள மீன் அங்காடிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு நிவாரணமாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், நிபந்தனையின்றி வங்கிக் கடனுதவியாக தலா ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும், மீன் வளத்தை பெரு நிறுவனங்களுக்கு அளிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,கடலூா் முதுநகா் மணிகூண்டு அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, பேரவையின் மாநிலச் செயலா் க.செ.கஜேந்திரன் தலைமை வகித்தாா். முற்போக்கு சிந்தனை இயக்கத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன், கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா், அச்சக உரிமையாளா் சங்கத் தலைவா் மு.காா்த்திகேயன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
பேரவை நிா்வாகிகள் எஸ்.சுப்புராயன், எம்.சௌபாக்கியம், டி.அஞ்சனாதேவி, பி.கல்பனா, டி.செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.