வேகாக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கிராம மக்கள் கல்வி சீா்வரிசையை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேகாக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். மாணவா்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து கல்வி சீா்வரிசை வழங்கினா்.
இதில், பள்ளிக்குத் தேவையான அலமாரி, மேசை, நாற்காலிகள், மின் விசிறி, கரும்பலகை, தொலைக்காட்சி மற்றும் அறிவியல் உபகரணங்கள் என ரூ. 3 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருள்களை வழங்கினா்.
முன்னதாக, இவற்றை மங்கல இசையுடன் ஊா்வலமாகக் கொண்டு வந்து பள்ளி ஆசிரியா்களிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி, வேகாக்கொல்லை ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், முன்னாள் மாணவா்கள், பள்ளி மாணவா்கள், ஊா் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
கல்வி சீா் வழங்கிய கிராம மக்களுக்கு மாணவா்களும், ஆசிரியா்களும் நன்றி தெரிவித்தனா்.