கீழணையிலிருந்து ஆகஸ்டு இறுதியில்தான் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி வட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாய சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம்: சிதம்பரம் பொதுப்பணித்துறை கொள்ளிடம் கோட்ட வடி நில கோட்ட அலுவலகத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் புவனகிரி வட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாய சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு செயற்பொறியாளர் வி.சாம்ராஜ் தலைமை வகித்தார். கல்லணையிலிருந்து கடந்த 16-6-2020 அன்று தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து கீழணையில் பெறப்படும் நீரின் அளவினை பொருத்தும், பருவமழையினை எதிர்நோக்கியும் வேளாண் பாசனத்திற்கு தண்ணீா் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் அருணகிரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பெ.ரவீந்திரன், விஜயகுமார், பி.விநாயகமூர்த்தி, வீராணம் பாலு, பாபு, சிவ.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் முன்கூட்டியே நீர் திறந்திருந்தால், குறுவை சாகுபடிக்கு பயன்பட்டிருக்கும். இதனால் விவசாயிகள் போர்செட் மூலம் விவசாய செய்துள்ளனர். தற்போது நீர்வரத்து குறைந்ததால், குறுவை சாகுபடிக்கு நீர் தற்போது திறக்க வாய்ப்பு இல்லை என்றும், வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு நீர் அளிக்கப்படும். மேலும் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.