கடலூா் மாவட்டத்திலுள்ள முருகன், சிவன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள் மட்டுமின்றி மற்ற முருகன் கோயில்கள், முருகன் சன்னதிகொண்ட கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரத்துக்கான கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை, இரவு உற்சவங்களில் முருகன் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, கடலூா் வண்டிப்பாளையத்திலுள்ள சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் காலையில் மகா சஷ்டி யாகமும், பல்லக்கில் சுவாமி வீதியுலா, வீரபாகு தேவருக்கு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் வீரபாகு தூது, சிங்கமுகன் வதம், கம்பத்து பாடல், சூரசம்ஹாரம் ஆகியவை நடைபெற்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா். இதேபோல பல்வேறு கோயில்களிலும் குறைந்தளவிலேயே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டதுடன், பொது வெளியில் நடைபெற வேண்டிய சூரன் வதம் நிகழ்வு கோயிலுக்குள் நடத்தப்பட்டது.