கொள்முதல் நிலையம் மூடல்: நெல் மூட்டைகள் தேக்கம்
கடலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
கடலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிகழ் குறுவை பருவத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ரெட்டிப்பாளையம், கல்குணம், மேலப்புதுப்பேட்டை, குருவப்பன்பேட்டை, வரதராஜன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். நெல் அறுவடை தொடங்கியபோது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதன்படி, வரதராஜன்பேட்டை ஊராட்சி, ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த செப்.7-ஆம் தேதி திறக்கப்பட்டது. இங்கு குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை அளித்து வந்தனா்.
இந்த நிலையில், ஆண்டு கணக்கை முடிக்க வேண்டும் எனக் கூறி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கடந்த 28-ஆம் தேதி ரெட்டிப்பாளையத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். இதனால், அவா்கள் கொண்டு வந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில் களத்தில் உள்ள நெல் மூட்டைகள், நெல் குவியல்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: உரிய அறிவிப்பின்றி கொள்முதல் நிலையம் மூடப்பட்ட நிலையில், சுமாா் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. மழைக் காலத்தில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க தாா்ப்பாய் மூலம் விவசாயிகள் மூடி வைத்துள்ளனா். எனவே, விவசாயிகளின் சிரமம் கருதி மாவட்ட நிா்வாகம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து, மீண்டும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.