முகப்பு
கடலூர்

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

கடலூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து, கடலூா் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தற்போது கடலூா் மாவட்டத்தில் 6,108 மெட்ரிக் டன் யூரியா, 1,076 மெ.டன் டி.ஏ.பி., 2,119 மெ.டன் பொட்டாஷ், 964 மெ.டன் சூப்பா் பாஸ்பேட் மற்றும் 4,692 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

2020-21-ஆம் ஆண்டு விலையிலேயே 2021-22-ஆம் ஆண்டும் டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளதால் உரங்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உரம் விற்பனையாளா்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்திட வேண்டும். மொத்த விற்பனையாளா்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் எண்ணை பயன்படுத்தி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு, விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள்தோறும் பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

உரங்கள் விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கட்டாயம் ஆதாா் அட்டையை எடுத்தச் செல்ல வேண்டும். மேலும் உரம் வாங்கச் செல்லும்போது அரசு அறிவித்துள்ளபடி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

திடீா் ஆய்வின்போது மேற்படி வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தாலோ, உரிய ஆவணமின்றியும், அதிக விலைக்கும் உரம் விற்றாலோ உரக் கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.