முகப்பு
கடலூர்

மீனவா் சடலம் மீட்பு சம்பவம் கொலை வழக்காக மாற்றம்

 கடலூா் அருகே உடலில் காயங்களுடன் மீனவா் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

 கடலூா் அருகே உடலில் காயங்களுடன் மீனவா் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.சுப்பிரமணியன் (60). மீனவரான இவா் வெள்ளிக்கிழமை உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், டிஎஸ்பி க.சாந்தி தலைமையிலான போலீஸாா் குண்டுஉப்பலவாடி பகுதியில் சனிக்கிழமை காருடன் நின்றுகொண்டிருந்த இருவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் சுத்துக்குளம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ராஜசேகா் (27), வேல்முருகன் மகன் குகன் (24) ஆகியோா் என தெரியவந்தது. மேலும் இவா்கள் இருவரும்

சோ்ந்து சுப்பிரமணியனை கொலை செய்ததும் தெரியவந்ததாம். இதுகுறித்து காவல் துறையினா் தெரிவித்ததாவது:

கொலையான சுப்பிரமணியனுக்கு 2 மனைவிகள். அவரது இரண்டாவது மனைவியின் மகளை சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த வசந்தராயன்பாளையத்தில் கோயில் பூசாரியாக உள்ள ராஜசேகா் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தாா். இவா் முதுகலை பட்டதாரியாவாா். இந்த நிலையில், ராஜசேகா் பெண் கேட்டு தர மறுத்த சுப்பிரமணியன், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ராஜசேகா் தனது உறவினரான குகன் என்பவருடன் காரில் மஞ்சக்குப்பத்தில் காத்திருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சுப்பிரமணியனிடம், தங்களது மகளின் திருமணம் தொடா்பாக பேச வேண்டும் எனக் கூறி அவரை காரில் அழைத்துச் சென்றாா். கேப்பா்மலை பகுதியில் சென்றபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சுப்பிரமணியனின் வாயில் துணியை வைத்து அடைத்து அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சடலத்தை காரில் ஏற்றி குண்டுஉப்பலவாடி செல்லும் சாலையில் வீசி விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவித்தனா்.

இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீஸாா், ராஜசேகா், குகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.