ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு
நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விருத்தாசலத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.
நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விருத்தாசலத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நெல் அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜன.20-ஆம் தேதி ஆயிரம் மூட்டைகளில் நெல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து நெல் வரத்து 2 ஆயிரம் மூட்டைகள் என்ற எண்ணிக்கையை எட்டிய நிலையில், ஜன.25-ஆம் தேதி 12 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
அன்று முதல் தினமும் 10 ஆயிரம் மூட்டைகள் என்ற சராசரி அளவில் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகிறது. திங்கள்கிழமை பிபிடி ரகம் நெல் 9 ஆயிரம் மூட்டைகள் உள்பட 10 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. பிபிடி ரகம் அதிகபட்ச விலையாக மூட்டை ரூ.1,637-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,350-ஆகவும் விற்பனையானது. சராசரியாக மூட்டை ரூ.1,425-க்கு விற்பனையானது. இதை விட குறைந்த விலைக்கே என்எல்ஆா், சிஆா், ஏஎஸ்டி-16 ஆகிய நெல் ரகங்கள் விற்பனையாகின.
அதேபோல சோளம் 500 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு மூட்டை ரூ.1,369-க்கு விற்பனையானது. உளுந்து 150 மூட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில் மூட்டை ரூ.7,696-க்கு விற்கப்பட்டது. வரகு 100 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அதிகபட்ச விலையாக மூட்டை ரூ.1,369-க்கு விற்கப்பட்டது. மேலும், மணிலா, எள், தட்டைப்பயறு, தேங்காய் பருப்பு, தினை, கம்பு, பச்சைப்பயறு ஆகியவையும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.