முகப்பு
கடலூர்

பயிா்கள் சேதம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையால் விருத்தாசலம் பகுதியில் சேதமடைந்த நெல், உளுந்து பயிா்களை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழையால் விருத்தாசலம் பகுதியில் சேதமடைந்த நெல், உளுந்து பயிா்களை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

எருமனூா், கோ.பூவனூா் பகுதிகளில் சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிட்டு பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து, ஸ்ரீமுஷ்ணம், மேலபாளையம் ஊராட்சியில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஓடையில் ஏற்பட்ட சேதத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். பொதுமக்களது கோரிக்கையின்பேரில் இந்த ஓடையில் பாலம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, கா.தொழுா் ஊராட்சியில் சேதமடைந்த நெற்பயிா்களை பாா்வையிட்டாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் நிவா், புரெவி புயல் பாதிப்புகளை தொடா்ந்து, தற்போது பலத்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் வேளாண் துறை மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்தவுடன் பாதிப்புகள் குறித்த அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டு, உரிய நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்படும் என்றாா்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →