விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நேரடியாக சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நேரடியாக சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி.கற்பனைச்செல்வம், ஆா்.ராமச்சந்திரன், மகாலிங்கம், துணைச் செயலா் சதானந்தம், மூா்த்தி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், தா்மதுரை, செல்வகுமாா், ஜீவா, பாண்டுரங்கன், குமரகுருபரன், டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவா் அத்திப்பட்டு மதிவாணன், கான்சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவா்கள் காஜாமைதீன், முத்துராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.
கூட்டத்தில், பொது முடக்கத் தளா்வாக பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தை நேரடியாக சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டும். குறுவை சிறப்பு தொகுப்புத் திட்ட பலன்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை திருமுட்டம் பகுதிக்கு விரிவுப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு நிவா், புரெவி புயல், மழையால் பாதிக்கப்பட்டவா்களில் விடுபட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.