முகப்பு
கடலூர்

சாராய ஊறலைக் குடித்த 3 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

குறிஞ்சிப்பாடி அருகே சாராய ஊறலைக் குடித்த 3 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாராய ஊறலை அமைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

குறிஞ்சிப்பாடி அருகே சாராய ஊறலைக் குடித்த 3 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாராய ஊறலை அமைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி அருகிலுள்ள புலியூா் காலனியைச் சோ்ந்தவா்கள் 18, 17, 16 வயது மாணவா்கள். இவா்கள் 3 பேரும் வியாழக்கிழமை விளையாடிவிட்டு அங்குள்ள கரும்புத் தோட்டத்துக்குச் சென்றனா். அங்கு, சாராயம் காய்ச்சுவதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஊறலை எடுத்து குடித்தனராம். இதில், ஒருவா் பின் ஒருவராக மயங்கி விழுவும் அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தகவலறிந்த கடலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி அரசு மருத்துவமனையில் மாணவா்களிடம் விசாரணை நடத்தினாா். இதில், அவா்கள் சாராய ஊறலைக் குடித்தது தெரிய வந்தது.

இதையடுத்து, குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த பழனி மகன் பூபாலன் (29) (படம்), சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கக் காலத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 290 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 304 போ் கைது செய்யப்பட்டனா். 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலைமறைவான 26 பேரைத் தேடி வருவதாக மாவட்டக் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.