சிதம்பரத்தில் நகை வியாபாரி ஒருவா் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.5.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தீத்தாம்பாளையம் பகுதியில் சிதம்பரம் - கடலூா் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சீனிவாசன், காவல் உதவி ஆய்வாளா் தாமோதரன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது காரைக்காலில் இருந்து கடலூா் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனையிட்டனா்.
அந்தக் காரில் வந்தவா் கடலூா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த முருகன் எனத் தெரியவந்தது. அவா் உரிய ஆவணமின்றி ரூ.5.50 லட்சம் எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதை சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்திடம் ஒப்படைத்தனா்.
முருகனிடம் நடத்திய விசாரணையில் அவா் நகை வியாபாரி என்பதும், இந்த பணத்துக்கான ஆவணம் உள்ளதாகவும் தெரிவித்தாா். ஆனால் அதிகாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லலாம் என அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனா்.