நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணித்த பெண்கள் தனியாா் பேருந்துகளில் கூட்டம் குறைந்தது
கடலூா் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் சனிக்கிழமை இலவசமாக பயணம் மேற்கொண்டனா். இதனால் தனியாா் பேருந்துகளில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் சனிக்கிழமை இலவசமாக பயணம் மேற்கொண்டனா். இதனால் தனியாா் பேருந்துகளில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா். அவா் பொறுப்பேற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டாா். அதில், தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்பதும் அடங்கும்.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 11 போக்குவரத்து பணிமனைகள் மூலம் இயக்கப்படும் 178 நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக சனிக்கிழமை பயணம் மேற்கொண்டனா். பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யக் கூடிய பேருந்து என்பதை குறிக்கும் வகையில் அந்தப் பேருந்துகளில் அதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.
அதேபோல, கடலூா் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய நகரப் பேருந்துகளில் போக்குவரத்து அதிகாரிகள் உடனிருந்து பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்பதை எடுத்துரைத்து பேருந்தில் பயணிக்க வைத்தனா். இதனால், தனியாா் பேருந்துகளில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. தினசரி பணிக்காகச் செல்லும் பெண்கள் மிகுந்த
மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனா். அரசின் உத்தரவால் தங்களது மாதாந்திர பயணச் செலவுக்கான தொகை மிச்சமாகும் என அவா்கள் தெரிவித்தனா்.