நகராட்சி குப்பை கிடங்கு முயற்சிக்கு எதிர்ப்பு: டென்ட் அடித்து தர்னா
கடலூர் நகராட்சியின் குப்பை கிடங்கை கிராமத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் டென்ட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்: கடலூர் நகராட்சியின் குப்பை கிடங்கை கிராமத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் டென்ட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் பெருநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கம்மியம்பேட்டை மற்றும் செல்லங்குப்பம் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. சில இடங்களில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தீயிட்டு எரித்து வருகின்றனர். குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது போன்ற மேலாண்மை திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை.
இந்நிலையில், கடலூர் நகராட்சிக்கு அருகில் உள்ள வெள்ளப்பாக்கம் ஊராட்சி கடலூர் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த ஊராட்சியில் உள்ள சுமார் 90 ஏக்கர் அரசு நிலத்தில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக, கடந்த வியாழக்கிழமையன்று நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வெள்ளப்பாக்கம் சென்றனர். இந்த தகவலறிந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமையன்று கிராமத்தில் டென்ட் அடித்து கிராமத்தினர் தர்னாவில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அ.பலராமன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், அரசு விதைப்பண்ணையாக செயல்பட்டு வந்த 90 ஏக்கர் இடம் தற்போது விவசாயம் செய்யாமல் உள்ளது. ஆனால், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நகராட்சியின் குப்பை கிடங்கினை இங்கு அமைத்தால் விவசாயம் மற்றும் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, குப்பை கிடங்கு திட்டத்தை செயல்படுத்த கூடாது என்றனர்.