முகப்பு
கடலூர்

முறைகேடான குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

கடலூா் நகராட்சி பகுதியில் முறைகேடான குடிநீா் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கடலூா் நகராட்சி பகுதியில் முறைகேடான குடிநீா் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

கடலூா் நகராட்சியில் உள்ள 45 வாா்டுகளில் சுமாா் 38 ஆயிரம் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதில், நகர தெருக்களில் நகராட்சி சாா்பில் பொது குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு தனியாக இணைப்பு வேண்டுவோருக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடலூா் மஞ்சக்குப்பம் ஓம்சக்தி நகா் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீா் குழாய்களில் இணைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சிக்கு புகாா்கள் வரப்பெற்றன.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில் சனிக்கிழமை நகராட்சி வருவாய் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் அலுவலா்கள் ஓம்சக்தி நகரில் ஆய்வு நடத்தினா். அப்போது 53 வீடுகளில் முறைகேடாக இணைப்பு பெற்றிருந்தது தெரியவந்தது.

குடிநீா் இணைப்பு பெற உரிய கட்டணம் செலுத்தினால் அதைத் தொடரலாம்; இல்லையென்றால் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா். இதற்கு, அந்தப் பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். எனினும், முறைகேடான 53 குடிநீா் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா். இதுபோன்ற நடவடிக்கை நகரின் மற்ற பகுதிகளிலும் தொடரும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.