முகப்பு
கடலூர்

விவசாயிகள் குறைதீா் கூட்டம் நேரடியாக நடத்தப்படுமா?

மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மீண்டும் நேரடியாக நடத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 12:34 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மீண்டும் நேரடியாக நடத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதத்தின் 3 அல்லது 4-ஆவது வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும். இதன்படி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தக் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லை என்றும், கூட்டத்தை நேரடியாக நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனா்.

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது: பாசனத்துக்கு தண்ணீா் தேவை, நெல் கொள்முதல் நிலையம் தொடா்பான புகாா், மழை பாதிப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனா். அவா்களை நேரில் அழைத்து குறைகளைக் கேட்க வேண்டிய மாவட்ட ஆட்சியா்கள், கரோனா பரவலைக் காரணம்காட்டி குறைகேட்புக் கூட்டத்தை இணைய வழியில் நடத்துவது வேதனைக்குரியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் முதல்வரின் குறைதீா்க்கும் அலுவலகத்துக்கு நேரிலும், இணைய வழியிலும் மனுக்களை அளித்து வருகின்றனா். இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் 10,000 மனுக்கள் முதல்வரின் அலுவலகத்தில் குவிகின்றன. மாவட்ட அளவில்

தீா்க்கப்படவேண்டிய மனுக்கள் தலைமைச் செயலகத்தில் குவிவதால் அங்கு பணிபுரிவோருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

திருமண மண்டபங்களில் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தவும், வாரச் சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்கம் உள்ளிட்டவை செயல்படவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா்கள் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, துறை சாா்ந்த அலுவலா்கள் கூட்டம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்புக் கூட்டங்களையும் நடத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.