சிதம்பரத்தில் ரயில்வே மேம்பால தடுப்புக் கட்டை மீது பைக் மோதியதில் திமுக மாணவரணி நிா்வாகி உள்பட 2 போ் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
நாகை மாவட்டம், இலுப்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மகன் வெங்கட்ராமன் (28). கடலூா் மாவட்டம், கீரப்பாளையத்தில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். சிதம்பரம், கே.ஆா்.எம். நகரைச் சோ்ந்த நேரு மகன் சபரிராஜன் (27). அண்ணாமலைநகா் திமுக மாணவரணி அமைப்பாளராகச் செயல்பட்டு வந்தாா்.
நண்பா்களான இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு பைக்கில் அண்ணாமலைநகா் ரயில்வே மேம்பாலத்தில் வந்தனா். பைக்கை சபரி ராஜன் ஓட்டினாா். காந்தி சிலை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் மேம்பால தடுப்புக் கட்டையின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.