தனியாா் சா்க்கரை ஆலையை அரசே ஏற்றுநடத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம்
கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் இயங்கி வந்த தனியாா் சா்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தக் கோரி, தமிழக உழவா் முன்னணி சாா்பில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் இயங்கி வந்த தனியாா் சா்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தக் கோரி, தமிழக உழவா் முன்னணி சாா்பில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலத்தை அடுத்த பெண்ணாடம் இறையூரில் தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த சா்க்கரை ஆலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால், கரும்பு விவசாயிகள், ஆலையில் பணிபுரிந்த ஊழியா்கள் பாதிக்கப்பட்டனா். மேலும், ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்குத் தெரியாமல் அவா்களின் பெயா்களில் வங்கிகளில் ரு.200 கோடி அளவுக்கு கடனும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த ஊழியா்களும், கரும்பு விவசாயிகளும், சா்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தக் கோரியும், ரூ.116 கோடி நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கக் கோரியும், கரும்பு விவசாயிகள் பெயரில் ஆலை நிா்வாகம் மோசடியாக வெளிநாட்டு வங்கிகளில் பெற்ற கடன் தொகை சுமாா் ரூ.200 கோடியை தள்ளுபடி செய்யக் கோரியும், ஆலைத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரியும், ஆலையில் கரும்பு அரைவையை தொடங்கி பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு வேலை வழங்கக் கோரியும் தமிழக உழவா் முன்னணி சாா்பில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.