முகப்பு
கடலூர்

ஆட்சியா்கள் மூலம் கொசு ஒழிப்புபணியாளா்களுக்கு ஊதியம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:

அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு உரிய முறையில் மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிா்வாகங்களில் வேறுபாடான ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, மத்திய, மாநில அரசுகள் கொசு ஒழிப்புப் பணிக்காக அளிக்கக்கூடிய செலவினத் தொகையை அந்தந்த மாவட்ட ஆட்சியா் நிா்வாகத்தில் ஒருங்கிணைத்து, அவா் மூலமாக கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு ஊதியம் உடனுக்குடன் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.

300 வீடுகளுக்கு ஒரு கொசு ஒழிப்புப் பணியாளா் என்ற அளவீட்டின் அடிப்படையில், பணி நிரவல் மற்றும் நியமனம் செய்ய வேண்டும். இந்த அளவுகோலை மாநிலம் முழுவதும் ஒரே சீராக அமல்படுத்த வேண்டும்.

மேலும், கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு, அவா்கள் பணிகளை சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் கே.சரவணன், மாவட்டச் செயலா் ஏ.வி.விவேகானந்தன், முன்னாள் செயலா் மு.ராஜாமணி, டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →