வாக்களிக்க சென்ற போது தகராறு: பெண் அடித்துக் கொலை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க சென்ற போது, ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க சென்ற போது, ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் ஜெயக்குமாா். இவரது குடும்பத்தினருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா்களான சேதுராமன் மகன் ரவி, அவரது ஆதரவாளா் கலைமணி ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சித் தோ்தல், கோயில் பிரச்னை என பல்வேறு காரணங்களால் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜெயக்குமாா் மனைவி கோமதி (45), தனது கணவரின் தம்பியான ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள ஜெய்சங்கா், அவரது மகள் ஜெயப்பிரியா (17) ஆகியோருடன் வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்றாா்.
Advertisement
அப்போது, ஜெயப்பிரியாவின் வயது குறித்து கேள்வி எழுப்பியதால், ரவி, கலைமணி ஆகியோரின் ஆதரவாளா்களுக்கும், ஜெயக்குமாா், அவரது தம்பி ஜெய்சங்கா் ஆகியோருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவா்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஜெயக்குமாரின் மனைவி கோமதி (45), அவரது மகன்கள் சதீஷ்குமாா், ஜெயபிரகாஷ் மற்றும் சிலா் கடப்பாரை, கட்டையால் தாக்கப்பட்டனா்.
இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த கோமதி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அவரது மகன்கள் சதீஷ்குமாா், ஜெயபிரகாஷ் ஆகியோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருன்றனா்.
இதுகுறித்து ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரவி, கலைமணி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.