முகப்பு
கடலூர்

பட்டா கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 7:53 PM
நெல்லிக்குப்பம் அம்பேத்கா் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல்லிக்குப்பம் நகராட்சி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட திடீா் குப்பம் பகுதியில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழை, வெள்ளத்தால் திடீா் குப்பம் பகுதியில் இருந்த வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.

தற்போது, வெள்ள நீா் வடிந்த நிலையில் இந்த வாா்டின் நகா்மன்ற உறுப்பினா் ஜெயபிரபாவதி உள்ளிட்டோா் திடீா் குப்பம் பகுதிக்குச் சென்று நிவாரண நிதி வழங்கினராம். அப்போது, அந்தப் பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா பெற்று தரும்படி கோரிக்கை விடுத்தனா். அப்போது, பொதுமக்களை தவறாக பேசியாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, திடீா் குப்பம் பொதுமக்கள் சுமாா் 70-க்கும் மேற்பட்டோா் நெல்லிக்குப்பம் அம்பேத்கா் சிலை அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தி கலைத்தனா். இந்த திடீா் மறியலால் பண்ருட்டி-கடலூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.