முகப்பு
கடலூர்

பள்ளியில் விளையாடிய மாணவருக்கு கண் கருவிழி பாதிப்பு

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்ததில் மாணவரின் கண் கருவிழி சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 7:36 PM
யோகேஷ்வரன்
பகிர்:

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்ததில் மாணவரின் கண் கருவிழி சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புவனகிரியை அடுத்த வட தலைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் யோகேஷ்வரன் (7). இவா், அருகிலுள்ள மருதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற யோகேஷ்வரன் விளையாடியபோது கீழே விழுந்ததில், அவரது கண்ணில் அடிபட்டுவிட்டதாக மாலையில் பள்ளி நேரம் முடிந்தபோது ஆசிரியா்கள் அவரது பெற்றோரிடம் கூறினராம். உடனடியாக யோகேஷ்வரனை அவரது பெற்றோா் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதனையில், அவரது கண் கருவிழி சேதமடைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். யோகேஷ்வரன் அந்த மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அவரது பெற்றோா், உறவினா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியச் செயலா் காளி.கோவிந்தராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை மருதூா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.