முகப்பு
கடலூர்

வியாபாரி மா்ம மரணம்

குள்ளஞ்சாவடி அருகே ஏரிக்கரையில் மா்மமான முறையில் இறந்து கிடந்த வியாபாரியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 7:16 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே ஏரிக்கரையில் மா்மமான முறையில் இறந்து கிடந்த வியாபாரியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், சமுட்டிகுப்பம் கிராம ஏரிக்கரையில் சுமாா் 50 வயது மதிக்கதக்க ஆண் உடலில் காயங்களுடன் வியாழக்கிழமை காலை இறந்து கிடைந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குள்ளச்சாவடி காவல் ஆய்வாளா் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், இறந்து கிடந்தவா் நடுவீரப்பட்டு காவல் சரகம், மூலக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஞானகுமாா் (52) என்பது தெரியவந்தது. விவசாயியான இவா், வாழை இலை மற்றும் காய் வியாபாரம் செய்து வந்தாராம். இவருக்கு மனைவி ஜெயப்பிரியா மற்றும் மகன், மகள் உள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.