ஊராட்சி மன்றத் தலைவா்கள் உண்ணாவிரதம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சாலை, மயானப் பாதை, நீா் நிலை படித்துறை, அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுவதற்கு தலா ரூ.40 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தப் பணிகளை தோ்வு செய்வது, அதற்கான இடங்களை தோ்வு செய்து அளிப்பது ஊராட்சி மன்றத் தலைவா்களின் பொறுப்பு. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான நிா்வாக அனுமதி கிடைத்ததும் மின்னனு ஒப்பந்தம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், வெளி நபா்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாதபடி அதிகாரிகள் செய்து விடுகின்றனாராம். இதைக் கண்டித்தும், சாலை மற்றும் கட்டடப் பணிகளை தரமாக அமைக்க வலியுறுத்தியும் சுமாா் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.